கத்தரீனுக்கு வயது பதினெட்டு!
கலாச்சார வித்தியாசங்களின் பரிமானங்களும் அளவுகோல்களும்!
(ஆங்கில உரையாடல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.)
“எப்படி இருக்கிறாய் தோழி?” சிரித்தபடி வந்த
கத்தரீனின் நீலக்கண்களும் புன்னகைத்தன.
“ நல்ல சுகமாய் இருக்கிறன்!” சொன்னபடியே
அவள் முகத்தைப் பார்த்தேன்.
“ எனக்கு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்குப் போயிருந்தது ஏனோ?” கேள்வியில் ஒரு
வித கோபம் கலந்த பாசம்.
“நேத்தைக்கு ஏதோ முகத்தை தூக்கி
வைச்சிருந்தாய்,கோபத்தில் இருக்கிறாய், இன்று பேசலாம் என
இருந்தேன்,” பதில் சொல்ல கத்தரீன்
கலகலவெனச் சிரித்தது அந்தக் கணங்களை லேசாக்கியது.
“ நேற்றைக்கு எனக்கு உடல் நிலை
நல்லாயில்லை, வைத்தியரைக் கூப்பிடச் சொன்னேன், நீ கூப்பிடவேயில்லை!” கத்தரீன்
குறைப்பட்டுக் கொண்டாள்.
“ நான் தொலைபேசியில்க் கூப்பிட்டேன், வைத்தியர் வராததுக்கு நான் என்ன பண்ணலாம்?”
பதில் சொல்லிவிட்டு நான் சில ஆவணங்களைச்
சரி பார்க்கத் தொடங்க, கத்தரீனின் அடுத்த
தாக்குதல் ஆரம்பித்தது.
“ வைத்தியர் ஆங்கிலம் மட்டும் தான்
பேசுவார், நீ சிலவேளை உன்னுடைய
மொழியில் அழைத்திருந்தால் அவருக்குப் புரிந்திருக்காது. அது தான் அவர்
என்னைப் பார்க்க வரவில்லைப் போல!”
குறுகுறுவென என்னைப் பார்த்தாள்.
“உடம்பெல்லாம் திமிர்தான் உனக்கு, உனக்கு இனவெறி
இருப்பதாய் பொலிசிடம் முறைப்பாடு செய்யப் போறன்!” சொல்லும்
போதே எனக்கு சிரிப்பு வந்தது,
அடக்கிக் கொண்டேன்.
“ நான் பார்க்காத பொலிசா? நீ என்னுடைய
சிகரெட் பக்கெற்றை எனது அனுமதியின்றி வைத்திருக்கிறாய்
என்று அவர்களுக்குப் போட்டுக் கொடுப்பேன்!” அவளுடைய
பதிலில் இருந்த நிஜம் என்
மனதைத் தொட்டுச் சென்றது.
“ நீ எந்த நாளும் வைத்தியரைக்
கூப்பிடுறது எதுக்கெண்டு எனக்கெல்லோ தெரியும்!” முகத்தை படு சீரியஸாக
வைக்க முயற்சித்தேன்.
வைத்தியர் வந்ததும் தனக்கு சிகரெட்
வேண்டும் என்று கேட்பதும், அந்த
வைத்தியரும் அவள் தன் வாழ்வை
அனுபவிக்க வேண்டும், கொடுத்துத் தொலையுங்கோ என்று சிரிப்பதும் வழமை.
“ அப்ப விளங்குதெல்லோ, அந்தாள் வந்து சொன்னால்
தான் எல்லாம் சரியாய் நடக்கும்,
குறையெல்லாம் நினைக்காமல் தயவு செய்து, ஒரேயொரு
சிகரெட் தா!” கத்தரீனின் கெஞ்சலும்
கொஞ்சலும் ஒருபடியும் குறையாது.
" உனக்கு எத்தனையாவது பிறந்த நாள் வருகிறது கேத்தரின் ?"
"பதினெட்டு !" பட்டென்று வந்தது பதில். தொடர்ந்தும் கேள்விகள், " என்னோடு என் பிறந்த நாளில் கொஞ்ச நேரம் செலவழிப்பாயா?"
"பார்க்கலாம், உனக்கு தானே என்னுடன் அடிக்கடி கோபம் வருகிறது!"
" நீ தான் தேவையில்லாமல் என்னுடன் மல்லுக்கட்டுகிறாய்." கேத்தரின் புன்னகைத்தாள்.
“ நீ பேசாமல் யாராவது ஒருத்தனோட
செட்டில் பண்ணியிருந்தால் இண்டைக்கு அவன் உனக்கு சிகரெட்
வாங்கித் தந்திருப்பான், என்னைக் கெஞ்ச வேண்டி
வந்திருக்காது!” சீண்டி விட்டுப் பதிலுக்காகக்
காத்திருந்தேன்.
“ நான் எந்த ஆணிடமும் அடி
பணிய விரும்பவில்லை, என் தாய், தந்தையை
இறுதி வரை என்னுடனேயே வைத்துப்
பராமரித்ததால் எவனுக்கும் என்னோடு சேர்ந்திருக்க விருப்பமிருக்கவிலை.
எல்லாருக்கும் என் சொத்தில் மாத்திரம்
ஒரு கண், களவானிப்பயல்கள்! நான்
இப்ப நல்லாய்த் தானே இருக்கிறன்? கத்தரீனின்
கேள்வி தொக்கியது.
“ சிகரெட் பெட்டி வாங்கிக் கொடு,
தயவு செய்து!“ மீண்டும் மிடுக்கோடு
கட்டளை.
உண்மை தான், நெஞ்சில் சளி
பிடித்திருப்பதால் புகைத்தல் இன்னும் கத்தரீனுக்கு உடல்நலக்குறைவை
ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் தப்பானது.
தன் விருப்பத்திற்கு நடப்பது, அவள் உரிமை,
அதில் தலையிட முடியாது.
“ சரி சரி தோட்டத்தில் போய்
இரு, பத்தே நிமிடத்தில் வருகிறேன்.”
நான் பக்கத்துக் கடைக்குப் புறப்பட்ட போது முகமெல்லாம் மலர
“ உன்னை சொர்க்கத்தில் ஆண்டவர் கௌரவிப்பார்!” என்றவாறே
கண்களைச் சிமிட்டிச் சிரித்த கத்தரீனுக்கு வயது
அப்போது 98. வயோதிபம் வினோதமானது.
“ அண்ணை ஒரு பக்கெட் சில்க்
கட் , 20 தாங்கோ!” கேட்டதும் அநியாயத்துக்கு
அந்தத் தமிழ் கடைக்காரர் என்னை
முறைத்துக் கொண்டார். 😅
இளம் பட்டதாரியாய் ஆங்கில வயோதிபர் இல்லம்
ஒன்றை முகாமைத்துவம் செய்த அனுபவம் அலாதியானது.
( Residential Homes- management)

Comments
Post a Comment